test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்

எனது வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு நன்றி: கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்.


எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு நன்றி என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''நாம் அனைவருமே ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலோ பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நீர் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜூன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோபர் 30.17 டிஎம்சி, நவம்பர் 16.05 டிஎம்சி, டிசம்பர் 10.37 டிஎம்சி, ஜனவரி 2.51 டிஎம்சி, பிப்ரவரி 2.17 டிஎம்சி, மார்ச் 2.4 டிஎம்சி, ஏப்ரல் 2.32 டிஎம்சி, மே மாதம் 2.01 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு இப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. விளைவு சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் மடிந்தனர்.

வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்துவிடப்படும் காவிரி அணை இன்னும் திறக்கப்படவில்லையே. இந்த ஆண்டும் விவசாயம் செய்ய முடியாதோ என்று வருத்தத்தில் இருந்தனர் விவசாயிகள். கடந்த வியாழன் அன்று இதனை மனதில் கொண்டே கர்நாடகாவில் ஒரு பட விழாவில் பேசினேன். தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.

நேற்று நீங்கள் 'அடுத்த மூன்று மாதங்களில் 94 டிஎம்சி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும்' என அறிவித்திருக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் 'தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவது அவசியம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த அறிவிப்புகளுக்காக நானும் எங்கள் மாநில மக்களும் தங்களுக்கு மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.


தாங்கள் செய்திருப்பது அரசியலைத் தாண்டிய மனிதாபிமான செயல். எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தங்களை நான் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்'' என்று விஷால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot